இந்திய அளவில் ட்ரெண்டான #Pray_for_Neasamani!' - என்னாச்சு நேசமணிக்கு?!


இந்திய அளவில் ட்ரெண்டான #Pray_for_Neasamani!' - என்னாச்சு நேசமணிக்கு?!சமூக வலைதளங்களையும், நெட்டிசன்களையும் புரிந்துகொள்ளவே முடியாது. எப்போது எது ட்ரெண்ட் ஆகும், யார் சர்ச்சையில் மாட்டுவார் என எதையுமே கணிக்கமுடியாது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லலாம். `நீ இன்னைக்கு வேணும்னா ட்ரெண்டிங்ல இருக்கலாம், அவர் எப்போவுமே ட்ரெண்டிங்தான்டா' என்று கூறும் அளவுக்கு வடிவேலு முகத்தைப் பார்க்காமல் உங்களால் சமூக வலைதளங்களைக் கடந்துவந்துவிடமுடியாது. மீம் கிரியேட்டர்களுக்குப் பஞ்சம் வரும்போதெல்லாம் `தெல்பத்ரி சிங்' என அவரின் பழைய காமெடிக் காட்சிகளைத்தான் தூசுதட்டுவர். அப்படித் தேர்தல் முடிந்து கொஞ்சம் வறட்சியில் இருந்த நெட்டிசன்களுக்குக் கிடைத்த பம்பர் பரிசுதான் இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக்.எங்கிருந்து இது ஆரம்பித்தது எனப் பார்த்தால் `Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம்தான் இதற்கு விதை போட்டிருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் இந்தப் பக்கம் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' எனக் கேட்க விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம்' எனப் பிரபல ஃப்ரெண்ட்ஸ் பட காமெடி சீனை நினைவுபடுத்தி கமென்ட்டிட்டார்.

Comments